ஞாயிறு, 21 ஜூலை, 2013

அதுக்கு பேரு டைரி.......


 எத்தனையோ டைரி நான் எழுதி இருந்தாலும் இது வரை அந்த டைரியை பற்றி எழுதியதே இல்லை. ஏதாவது எழுதி விட்டு தூங்கி விடலாம் என ஆரம்பித்த என் இரவுகள், எதையாவது எழுதிவிட்டுத் தான் தூங்க வேண்டும் என மாற்றி அமைக்கப்பட்டதற்கு காரணம் டைரி தான். என் கனவுகள் என் கண்ணீர், என் சந்தோசம், என் காதல், என் இரவுகள் எல்லாம் எப்படி பட்டதென்று என் டைரிகளுக்கு மட்டுமே தெரியும்.
 
  "எப்ப பார்த்தாலும் ஏதா...வது எழுதிகிட்டே இருக்கியேடா"னு கேட்க்கும் அம்மாவிற்கு தெரியும் நான் இரவு எத்தனை மணி வரை டைரி எழுதுவேன் என்று. நான் டைரியில் எப்படியெல்லாம் எழுதுவேன், எதையெல்லாம் எழுதுவேன் என்று என் அப்பாவிற்கு தெரியும். காரணம் எனக்கே தெரியாமல் என் டைரியை படித்த முதல் வாசகர் என் அப்பா தான். என்னிடம் இருக்கும் நல்ல பழக்கம் டைரி எழுதுவது தான் என்று சொந்தங்களிடம் சொல்லி பெருமைப்பட்டு கொள்வார்.
 
பத்தாவது பெயில் ஆனது, வீட்டை விட்டு ஓடினது, திரும்பி வந்தது, அப்பா அடிச்சது, திரும்ப படிச்சது, வேலைக்கு போனது, முதல் சம்பளம் வாங்கியது, சம்பளத்துல அம்மாவுக்கும், அக்காவுக்கும் சேலை வாங்கியது, அக்காவுக்கு கல்யாணம் ஆனது, அக்கா கல்யாணம் ஆகி போனாலும் இன்று வரை அந்த சேலையை பாதுகாத்து வச்சிருக்கது, அப்பா பைக் வாங்கி கொடுத்தது, முதல் விபத்து ஏற்ப்பட்டது, முதல் சாவை கண் முன்னாள் பார்த்தது, கடைசியா அழுதது, அக்கா குழந்தைய முதன் முதலில் தூக்கியது, பின்னொரு நாளில் அவளுக்கு மொட்டை போட்டது, சென்னை வந்தது, வேலை தேடினது, என் காசில் நான் பைக் வாங்கியது, அதுல அப்பாவ வச்சு ஓட்டிட்டு போனது, இன்னும் நிறைய இருக்கு என் டைரிகளில், என் மூளையின் இன்னொரு பதிப்பு தான் டைரி.
 
என் மொத்த டைரிகளையும் ஸ்கேன் செய்தால் மொத்தம் மூன்று காதல் கிடைக்கும். பப்பி லவ், குப்பி லவ், கடைசியா தொப்பி லவ். பப்பி லவ் எல்லாருக்கும் அமைந்தது போல தான் எனக்கும், சிறுவனில் இருந்து பையனாக நான் மாறிய போதே அதுவும் மாறி போய் விட்டது. குப்பி லவ் சயனைடுக்கு ஒப்பானது. உருகி உருகி, விழுந்து விழுந்து காதலித்ததால் ஏகப்பட்ட அடி வீட்டிலும், வாழ்க்கையிலும். என்னை விட அந்த சயனைடு காதலை என் டைரிகள் அழுது கொண்டே சொல்லும். கடைசியாக வந்தது தான் தொப்பி லவ், யார் தயாரித்தது, எங்கிருந்து வந்தது எல்லாம் எனக்கு தெரியாது, கொஞ்ச நாள் என் தலையில் இருந்தது, இப்போ யார் தலையில் இருக்கென்று அந்த தொப்பிக்கு மட்டும் தான் தெரியும். கொஞ்சம் என் டைரிகளுக்கும் தெரியும். என் டைரியை படித்தவர்களுக்கும் தெரியும். 
 
 
எப்போதாவது பழைய டைரியை எடுத்து படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை, கொஞ்சம் நியாபகம் எல்லாமே வரும், காரணம் அந்த டைரி தான். எப்பவுமே என் கைகளில் ஒரு டைரி இருக்கும், அதில் ஏகப் பட்ட கதா பாத்திரங்களும், கொஞ்சம் கதைகளும் இருக்கும். நான் எப்படி தூங்காமல் இருந்து பழகி விட்டேனோ அப்படி தான் டைரிகளும் என்னை தூங்க விடாமல் பழக்கி விட்டது. டைரிய பற்றி எழுதியது கூட அந்த டைரியில் தான் இருக்கு. அதுல உள்ள ஒரு பக்கம் தான் இங்க இருக்கு.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக